கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாரணியத்தை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளில் சாரணியக் குழுக்களை அமைத்தல், மாவட்ட சாரணிய சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், சாரணிய பயிற்சிகளுக்கு உதவுதல், வருடத்திற்கு மூன்று தடவைகள் சாரணிய ஆணையாளரின் ஒன்று கூடலை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலை துளசிபுரத்திலுள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ.எம். முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ். இருதயநாதன், திரு கோணமலை மாவட்ட ஆணையாளர் இராஜ ரஞ்சன், கிழக்கு மாகாண சாரண ஆணையாளர் யூ.எல்.எம். ஹாஸிம் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.