“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார் “ – பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன்.

“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் நேற்று (22.09.2020) தெரிவித்தார்.

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ்! சபையில்  கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு - Tamilwin

நேற்றை அமர்வில் அவர் மேலும் பேசுகையில்…

“வடக்கு, கிழக்கிலே எங்கள் உரிமைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம் ஒன்று கட்டளையிட்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் திருவிழா நடத்துவதற்கு நிர்வாகம் முயன்றபோது பொலிஸார் வலிந்து சென்று அதனைத் தடை செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

திருவிழாவை நடத்த முடியும் அதனைத் தடுக்கமுடியாது என்று அங்கே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத்தின் கட்டளையை மீறி நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் திருவிழாவை நடத்தவிடாது குழப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.

எங்களுடைய நினைவேந்தல் விடயத்திலே நீதிமன்றம் சொன்னதை அவ்வாறே கடைப்பிடித்து வீடுகளில் சாமிக்குக் கூடப் பூவைக்க முடியாத அளவுக்குப் பொலிஸாரின் கெடுபிடிகள் உச்ச அளவில் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை அழைத்து, திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று அச்சுறுத்தியிருக்கின்றார்.

எங்களுடைய உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நினைவேந்தலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம்.

”மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” எனவும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *