முல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.
முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.