பாராளு மன்றத்தில் தான் ஆற்றிய உரை வானொலியில் ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையின் இடைநடுவே பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி. சிங்கள செய்தி சேவையில் ஒலிபரப்பப்பட்ட போது இடையில் பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் தனது உரைக்கு இடைநடுவில் பாராளுமன்றத்திலேயே பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதா அல்லது இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து ஒலிக்கச் செய்யப்பட்டதா என்று அவர் நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.