கல்முனை பிரதேச செயலகங்களில் தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தித்தல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முரளிதரன் எம்.பி. மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பான விசேட கூட்டமொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் முழுமையாக நிர்வகிக்கத்தக்க வகையிலும் செயற்படுத்தும் வகையிலும் ஆளணி நியமனம் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவுபடுத்தி செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி உட்பட பல கிராம பெரியார்களும், கல்விமான்களும் கலந்துகொண்டனர்.