சீன பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனையும் பெண் அதிகாரி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் ஏனையவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது பீஜிங் நீதிமன்றம். அதன் விபரம் வருமாறு:- சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் தயாரான குழந்தை கள் பால் பவுடரில் நச்சுத்தன்மை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விஷத் தன்மை உள்ள பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் 6 பேர் பலியானார்கள்.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கிட்னி, ஈரல் பழுதடைந்தது. சில குழந்தைகளுக்கு கை, கால் முடங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பால் பொருள்களுக்கு உலக நாடுகள் தடை விதித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள், விற்பனை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பீஜிங் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பெண் அதிகாரி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.