“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” – செல்வம் அடைக்கலநாதன்

“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி புயல், மாவீரர் தினத்தன்று வந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருபேன்’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவருடைய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்களைப் புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதித் தேர்தலொன்றில் தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தமை மன வேதனையளிக்கின்றது. சரத் பொன்சேகாவின் கருத்து மிகவும் மோசமானது. அதனைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்.

விடுதலைப்புலிகளை அரசு எதிர்க்கின்றது என்பது உண்மையாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இறந்தவர்களை அனுஷ்டிக்க உறவினர்களுக்கு உரிமை உண்டு. மனிதாபிமானமுள்ள எவரும் அதனை எதிர்க்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *