“ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்” என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (10.12.2020) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை எரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவு ஒரு இனத்தை பாதிப்பதால் அது நாட்டில் பதட்டமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும். முஸ்லிம் மக்கள் தங்களது அன்புக்குரியவர்களை தமது இனம் சார்ந்த மத சம்பிரதாயங்களுடன் முறையாக அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகின்றனர்.

இஸ்லாம் மதத்தில் இறந்தவர்களை எரிப்பது தண்டனையாகக் கருதப்படுகின்றது. எனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காத அரசாங்கத்தின் முடிவை குறித்த துறைசார்ந்த அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் இனத்தவர்களுடையவையாகும். குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் இறந்தவர்களது சடலங்களை ஏற்க மறுக்கும் நிலைமை காணப்படுகின்றது.

உலகளாவிய முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். எனவே ஏன் இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் விடயம் தொடர்ந்தும் தடுக்கப்படுகின்றது என்பதனை அரசாங்கம் முழுமையாக ஆராயவேண்டுமென நாம் கேட்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *