.வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடி மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்:
விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின்வாங்கிச் செல்வதும் – பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது. எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.
உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.
பிரபாகரன் எங்கும் ஓடவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்” என்று நடேசன் கூறியுள்ளார்.
பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்
பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார். ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் “பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன” என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
“போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் கூறினார். “வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
பார்த்திபன்
எப்படித்தான் உந்த ஆளாலே இப்பவும் கதைவிட முடிகின்றது. வசதியான பதுங்கு குழியோ??
xavier
poor guy nadesan doesnot know what going on around him maybe he still in bunger ……….. raw helped prabha and pottu to escape
SUDA
//வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.//
//பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்.//
//சிவிலியன்கள் மத்தியிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடாத்த வேண்டாமென புலிகளிடம் யாழ் ஆயர் வேண்டுகோள்.//
இத்தால் வெளிச்சத்துக்கு வரும் உண்மை யாதெனில்…..
1. புலிகள் மக்களுக்குள் ஒளிந்திருந்து கொண்டு பொதுமக்கள் பலியாவதை பிரசார உத்தியாகக் கொள்ளும் உள்நோக்கில் படையினர் மீது தாக்குதல் நடாத்துகின்றனர்.
2. தம் பாதுகாப்பு கருதியும் பிரசார நன்மை கருதியும் மக்களை பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர்.
3. வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு எதையாவது சொல்ல வேண்டுமென்பதற்காக நடேசன் பொய் சொல்கின்றார்.
thurai
புலிகள் தந்திரமாக பின்வாங்கும் போதும் மக்களிற்கு கேடயமாகவா உள்ளார்கள் அல்லது புலிகள் தங்கள் உயிரைப் பாதுகாக்கவா பின்வாங்குகிறார்கள்?.
மக்களின் அழிவில் ஆனந்தமடைவதும், அதனை விளம்பரப்படுத்தி அனுதாபம் தேடுவதும், பணம் சேர்ப்பதும் புலிகளின் பாரம்பரியம்.
அப்பாவித் இலங்கைத் தமிழரை ஆயுதமுனையிலும், உலகில்வாழ் அகதிக்ளை பொய் பிரச்சாரமும், மிரட்டல் மூலமும் அடி பணிய வைக்கலாம். ஆனால் அறிவாளிகளால் ஆளப்படும் உலகினை புலிகளினால் ஏமாற்றமுடியாது.
ஏமாற்ற முயலும் புலியின் ஆதரவாளர்களால், இலங்கையில் சிங்களவரிடம் அடிவாங்காமல் தப்பி வெளிநாடுகளில் வாழ்பவர்கள், உலகமெங்கும் மனிதனாகவே மதிக்கப்படாது வாழவேண்டிய நிலைமை வரும்.
துரை
damilan
//மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் //
வேற வழி அப்படி வந்தாலாவது யுத்தம் நிற்கும் என்கிற நப்பாசைதான்.
//தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்//
உக்கிரச் சண்டையில்தான் இவ்வளவு இழப்பா ?
//கௌரவமான சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ..//
அப்ப தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா ?
//தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும் எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே. ..//
செல்ல வழியில்லை என்று சொல்லுங்கள் . மக்களுடன் தலைவர் இருக்க பங்கருக்குள்ள அவ்வளவு இடமிருக்கா? தலைவா ஆணையிடு என்று எங்கோ கேட்ட குரல் இப்போ ஆளைவிடு என்றல்லவா கேட்கிறது.
Thaksan
ஆறுமுகம் தொண்டமானுக்கு இருக்கிற அறிவுகூட உங்கட தலைவர் பிரபாவுக்கு இல்லை எண்டது இப்பவாவது விளங்குதா எண்டு (மோட்டுச்) சிங்களவன் நேற்று கடையில் வைத்து கேட்டான். எல்லாம் காலம். 2002 ல் எப்பிடி இருந்தம். இப்ப இப்பிடி போயிட்டம். தலைவர் டெலஸ்கோப் வைத்து பார்த்துக் கொண்டிருந்த போட்டோவை பார்த்து தூர நோக்கோடு சிந்திக்கிறார் எண்டதை சிம்போலிக்காக காட்டுறார் எண்டு நினைச்சன். இப்பதான் விளங்குது ‘ஆமிகாரன் எங்க நிக்கிறான்’ எண்டுதான் தலைவர் பார்த்திருக்கிறார். அவருக்கு தெரியும் தான் யார்? தன்ர பலமென்னவெண்டு. சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே தலையை ரணகளமாக்கிட்டான்கள் நம்மட ஊடககாரன்கள். சரி> இனியாவது சனத்தை தங்கட பாட்டுக்கு விடுகோவன். புலம் பெயர்ந்த கையோட புலனும் பெயர்ந்தா போனீங்கள்? உங்கட காசு தானே இங்க எங்கட உயிரைக் குடிக்குது. இனியாவது விளங்கிக் கொள்ளுங்களேன்.