புதிய வேளாண் சட்டங்கள், மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மட்டுமே பயன் அளிக்கும் என்றும், அவை ரத்து செய்யப்படும் வரை, விவசாயிகள், தங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 2 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை, குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை சந்தித்து, திரு. ராகுல் காந்தி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே ராகுல் காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர் ,
“நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டுமாறு குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். தகுதியற்ற நபர் நாட்டை வழி நடத்துவதாகவும், விவசாயிகளுக்கு முன்னால் எந்த சக்தியும் நிற்க முடியாது என்றும் கூறினார்.
விவசாயிகள், சிறு வணிகர்கள் பற்றி பிரதமருக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்ட திரு. ராகுல், விவசாயிகளின் குரலுக்கு பிரதமர் திரு. மோதி செவி சாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஜனநாயகம் இல்லாத சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய பா.ஜ.க. அரசு சில முதலாளிகளுக்காக மட்டுமே இயங்கி வருவதாகவும், புதிய வேளாண் சட்டங்கள், மத்திய அரசுக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் விமர்சித்தார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், வசதி படைத்தவர்கள் இல்லை என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார். போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல என்றும், அவர்கள்தான் நாட்டிற்கு வளம் சேர்ப்பதாகவும், ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.