பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணாசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுனவுடன் இணைந்தே களமிறங்கியிருந்தது. பொதுஜனபெரமுனவின் வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டது. எனினும் ஆட்சியமைத்தது முதல் பெரமுன சுதந்திரக்கட்சியினை முன்னிலப்படுத்தாத போக்கே தொடர்ந்தது. இந்நிலையில் சுதந்திரக்கட்சியினர் பலரிடையேயும் அதிருப்தியான நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இதே நிலை தொடருமாயின் பெரமுனவிலிருந்து பிரிந்து தனித்தே தாம் மாகாணசபைத்தேர்தலில் களமிறங்க நேரிடும் என ன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது,
நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் . எங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்.
பொதுதேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது, சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. களுத்துறை நுவரேலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை . கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது .
நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர். தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வதுதிருத்தம் உருவானது.
நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா? என்பது குறித்து பார்க்கவேண்டும். மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். 30 வருடங்களிற்கு பின்னரும் மாகாணசபை முறை வெற்றியாதோல்வியா? என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை.
மாகாணசபைமுறைக்காக செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை,சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.