“யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள்” என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றிரவு(08.01.2021) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் தமது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு ட்விட் செய்துள்ளார்.
மக்களை பலவந்தமாக மறக்கச்செய்வதற்கான முயற்சிகள் மக்கள் முன்னரை விட அந்த விடயத்தை மேலும் நினைவில் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள் என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள அவர் “மக்களின் இழப்புகள் நினைவுகள் வலிகள் துயரங்கள் கண்ணீர்கள் ஏன் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏனென்றால் வலிகளும் வேதனைகளும் கண்ணீரும் ஆயுதங்களை விட வலிமையானவை என்பது உங்களிற்கு தெரிந்திருக்கின்றது என அவர் பதிவிட்டுள்ளார்.
எந்த தலைவர்களின் உத்தரவு காரணமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களின் நினைவுத்தூபியை சிதைப்பதற்கு இரவின் இருளில் இயந்திரங்களை அந்த தலைவர்களே அனுப்புவது இழிவானது – இனவெறி -கொடுரமானது என கிரவுண்ட் வியுஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் அமாலினி டி சய்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.