“த சண்டே லீடர்” ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்நபர் தெஹிவளை, அத்திடியப் பகுதியில் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேக நபர் குறித்த விவரங்களை பொலிஸார் இதுவரை வெளிவிடவில்லை.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இம் மாதம் 8 ஆம் திகதி லஸந்த விக்கிரமதுங்க தெஹிவளையில் உள்ள சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட அத்திடியப் பகுதியிலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.