சுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கைத் தீவில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான அவலத்தையிட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தீவிர கவனத்தை கொள்கின்றது. வடக்கு வன்னிப்பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சுயநிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் கடும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தப் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் போரானது ஒரு இனப் படுகொலைக்குரிய நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. பெரும் உதவிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக போரில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்ய வேண்டும்.
அதேநேரம், இரு பகுதியினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஒரு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்குமாறும் ஆபரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.