தரம் 1 வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைக்கும் தொகை வட-கிழக்கில் பயங்கர வீழ்ச்சி.

இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்துக்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.

உலக மக்கள் தொகை வருடம்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.

ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக்காலங்களில்கூட பாடசாலைக்கு முதலாம்தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரித்தே சென்றது.

ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது என தனியாகக் கூறிவிட முடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.

இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப் புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்கு தொழில் வாய்ப்பு ஒரு காரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவுக்கு பலர்தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *