“ஐ.நா வில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு பலமான நாடுகள் அச்சுறுத்தல்”- ஜயனாத் கொலம்பகே

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க, பலமான நாடுகள் ஏனைய உறுப்பு நாடுகளை அச்சுறுத்துகின்றன.”என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பலம் வாய்ந்த நாடுகள், உறுப்பு நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் கடன்களை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதை அச்சுறுத்துகின்றன.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 நாடுகளில் ஒரு மேற்கு நாடேனும் இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்குலக நாடுகளுக்குச் சார்பான அமைப்பாகும்.

இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை நகல் இணை அனுசரணை நாடுகளால் இன்று அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த பிரேரணையை இணை அனுசரணை நாடுகள் இருபக்க ஒத்திசைவுடன் நிறைவேற்ற எதிர்பார்த்திருந்தாலும், இலங்கை வாக்கெடுப்புக்குச் செல்லத் தீர்மானித்துள்ளது.

கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எமக்கு இருந்த 10 வாக்குகளை 15 வரை அதிகரிக்கச் செய்யும்.

ஐ.நாவில் இலங்கை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 அல்லது 21ஆம் திகதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு ஏற்ற விதத்தில் நாம் தயார்படுத்தல்களை மேற்கொள்கின்றோம்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *