“என்னுடைய பிறந்ததநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்” என சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது 58 ஆவது பிறந்த தினமான நேற்று சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் இருந்து எழுதுகிறேன்.
மார்ச் 11 என்பது விசேட நாள் ஆகும். இன்று (நேற்று) எனக்கு 58 வயது பூர்த்தியாகிறது.
நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட வாழ்க்கையின் முதலாவது பிறந்த நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. கடந்த வருடமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறைக்குத் தள்ளினர். எனினும், பிறந்த நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டேன்.
‘தற்போது நான் சிறையில் இருந்தாலும் என்னை தலைப்பிட்டு வெளியில் பல கதைகள் பேசப்படுகின்றன. எனது விடுதலைக்காக பலர் வெளியில்
இருந்து செயல்படுகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன். நான் சில நாட்கள் உள்ளே இருக்க வேண்டி இருக்கும். ஆகவே
பெரிய எதிர்பார்ப்பு எதனையும் வைத்துக்கொள்ள வேண்டாம்’
நான் யாரும் இல்லாத ஒருவன். நான் 60 வயதில் ஓய்வு
பெறப்போவதில்லை. 1963 இல் பிறந்த பலரை விட நான் பலசாலி.
ஆகவே, உயிர் இருக்கும் வரை நான் மக்கள் சேவகனாகச் செயற்படுவேன்’.
‘என்னால் தொடர்ச்சியாக கடிதம் எழுத முடியாது. வெளியில் வந்தாலும் கையசைக்க விடுகிறார்கள் இல்லை. முடியுமானபோது பின்னர் எழுதுகிறேன். இன்று கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.