“நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.” – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

“நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை விவ் ரெஸ்ட் விருந்தகத்தில் நேற்று (10.04.2021) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ். நகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியாது? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் செய்த இந்த வேலைக்கு யாரோ பெயர் வாங்கிக் கொள்ளும் வேலையாகவே இது உள்ளது. உண்மை அதுவானால் ஏன் அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைதியாக இருக்கின்றார்?

யாழ். நகர முதல்வர் மணிவண்ணனின் கைது தவறானது. ஏனெனில் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு சட்டம் யாழ். மாநகர சபைக்கு இன்னொரு சட்டமா? அப்படியானால் இந்த நாட்டில் இரண்டு சட்டங்களா? ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு எங்கே? தமிழர்கள் செய்தால் தவறு ஏனையவர்கள் செய்தால் அது சரியா?

இன்று இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகின்றது.இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. அப்படியானால் ஏன் அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகமா? புது வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் – பொருட்களின் விலைகள் மலை போல உயர்ந்துள்ளது. பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

உதாரணமாக உழுந்து, மஞ்சள், பயறு, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றார்கள்.

ஆனால் அரசாங்கம் கைது செய்வதும் நாடாளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதும், சிரேஸ்ட அரசியல்வாதிகளின் தவறான சொற் பிரயோகங்களும் என பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

எனவே உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு தேவையற்ற அல்லது பிரயோசனமற்ற விடயங்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

உடனடியாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டங்களும் வேலை நிறுத்தமும் என மக்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் இன்று எல்லா விடயங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பதையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *