“தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.” என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளளோம்.
கொரோனா அச்சுறுத்தலால் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்ற போதிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் இனத்தின் பெரும்பான்மைத்துவத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.