ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஏ.ஜி.பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்திருந்தார்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” – என்றுள்ளது.