“பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

எக்ஸ் – பிரஸ்’ பேர்ல்’ கப்பல் தீப் பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

கப்பல் தீ விபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்டறிய உஸ்வெடகெய்யாவ கடற்கரைக் பகுதியில் இன்று கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டபோதே   பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடல் சூழலைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார். இது போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

கப்பல் தீ விபத்துக்குள்ளானமையால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அறிவித்தார்.

கடல் மாசுபாட்டைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை உள்ளிட்ட அனைவருக்கும்  பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். பிரதமரின் இந்தக் கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான நாலக கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உளுகேதென்ன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் த சில்வா, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *