“இந்த அரசை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.” – வலுப்படுத்த ஒன்றிணையுங்கள் என சஜித் அழைப்பு !

இலங்கையின் மிக மோசமான அரசான ராஜபக்சக்களின் கூட்டு அரசை விட்டு விரட்டியடிக்க அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.” என  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

அரசின் கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த அரசு நாட்டைக் கொரோனா பரவல் ஏற்படுகின்றதா, இல்லையா என்று ஆராயும் ஆய்வுகூடமாக மாற்றியுள்ளது. அரசின் தன்னிச்சையான, வினைத்திறனற்ற, குழப்பமான செயற்பாடுகளால் நாட்டின் அனைத்துத்துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, தடுப்பூசி வழங்கல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் அரசியல் இலாபம் பெற அரச தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.  அறிஞர்களின் கூட்டணி என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், மக்களின் சுவாசிக்கும் உரிமையைப் பறிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

பயணக் கட்டுப்பாடுகளில் மக்களை இரு விதமாக நடத்தும் நிலை உருவாகியுள்ளது. அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சரியான திட்டங்கள் இல்லை.

விவசாயிகள் உரம் இன்றி துன்பப்படுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதிப்பும் காடழிப்பும் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, துறைசார் அமைச்சர் பொறுப்பின்றி இருக்கின்றார். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த அரசை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் நலனைக் கவனத்தில் எடுக்கும் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *