“கோட்டாபாயராஜபக்ஷவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமைக்காக பலர் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாடு தப்பிவந்துள்ளனர்.” – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் அறிக்கை !

இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னும் தொடர்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மிளகாய்த்தூள், பிளாஸ்டிக்பைகள், பெற்றோல், கட்டுமானக்குழாய்கள், தண்ணீர் பீப்பாய்கள், மின்சார வயர்கள், சிகரட்கள், முட்கம்பிகள், சூடான இரும்புக்கம்பிகள், கப்பிகள் மற்றும் கிரிக்கெட் விக்கெட் மட்டைகள் என்பன சித்திரவதை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கும் அதேவேளை, போர் முடிவடைந்ததன் பின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 2020 நவம்பரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்ற பாதிக்கப்பட்டோரில் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களது வாக்குமூலங்களை ஆவணப்படுத்துவதில் தாமதமேற்பட்டுள்ளது. ஜனாதிபதித்தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகப் பிரசாரம் செய்தமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டமையுமே தாம் கடத்தப்பட்டமைக்கு காரணமென விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கூறுகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஷ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொள்வதுடன் பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இதுவாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டிய நேரமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *