“சீன காலனியாகிறதா அம்பாந்தோட்டை ..? ” – தேசிய பிக்கு முன்னணி கேள்வி !

“அம்பாந்தோட்டை மாவட்டத்தை சீன காலனித்துவத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியா திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.” என தேசிய பிக்கு முன்னணியின் பொதுச்செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்தார். ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கை வெறும் பேச்சளவில் மாத்திரம் பின்பற்றப்படுகிறது. சீன நாட்டவர்கள் நாட்டின் பொது சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக செயற்படுவதை காண முடிகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸமஹராம வாவியை புனரமைக்கும் பணிகளை சீன நாட்டவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். இந்த வாவியை புனரமைக்கும் திறமை தேசிய மட்டத்தில் உள்ள பொறியியலாளர்களுக்கு கிடையாதா? நாட்டின் மரபுரிமைகளை பிற நாட்டவர்கள் வசம் ஒப்படைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பில் ஈடுப்பட்ட சீன நாட்டவர்கள் அணிந்திருந்த ஆடை சீன நாட்டு இராணுவ சீருடையை ஒத்தது என குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்த அரசாங்கமும், சீன தூதரகமும் குறிப்பிடும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணானதாக காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீன நாட்டவர்கள் அபிவிருத்தி பணிகளிலும், பாரம்பரிய கைத்தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுப்படுகிறார்கள். இதனை சாதாரணமாக கருத முடியாது. வரலாற்றில் இடம் பெற்ற சம்பவங்களை மீட்டிப்பார்த்துக் கொள்வது அவசிமாகும். அம்பாந்தோட்தோட்டை மாவட்டத்தை சீன காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரும் முயற்சியா? திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் சீன இராணுவத்துக்கு எந்த தொடர்பும் கிடையாது என்பதை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் அது குறித்த சீன நிறுவனத்தின் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட ஆடை எனவும்  அமைச்சரவை பேச்சாளர் ஹெஹலியரமபுக்வெல குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *