“நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது.” – அநுரகுமார திஸாநாயக்க

“தேர்தல் முறைமை சீர்திருத்தம் ஊடாக நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்வதற்கே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.” என  ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேர்தல் முறைமை சீர்திருத்தம் ஊடாக நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்வதற்கே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முறைமை மாற்றங்களில் விகிதாசார தேர்தலை முறைமையே முற்போக்கான, ஜனநாயகமான தேர்தல் முறைமையாக விளங்குகின்றது.

இம்முறைமையை மாற்றுவதாக இருந்தால் தற்போது இருப்பதைவிடவும் மேலும் சிறந்த முற்போக்கான, ஜனநாயகம்மிக்க புதிய முறைமையாகவே இருக்கவேண்டும். உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் மக்களின் சார்பில் இருக்கவேண்டும். அதேபோல் அனைத்து தேர்தல்களுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமும் இதுதான்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகிய மூன்றுக்கும் ஒரே தேர்தல் முறைமை இருக்கவேண்டும். இவை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. எமது யோசனைகள் தெரிவிக்குழுவில் முன்வைக்கப்படும். ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *