மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
இதனையடுத்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூபாலப்பிள்ளை ஹரன் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.