வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் – உயிரை காக்க அயல்நாடுகளில் தஞ்சமடையும் ஆப்கான் வீரர்கள் !

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழியின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.

அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

 

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *