கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.
பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம் இராணுவத்கைத பயன்படுத்தி அடக்கியதுடன் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் கையாண்டு வருகின்றது.
இந்த நிலையில் கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கியூபா குற்றம் சுமத்தியுள்ளது. கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைச் சில நாட்களுக்கு முன்னர் கியூபா அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே கியூபாவில் போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.