மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் ட்ரொடெக்ட் அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்?
எனவே, சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது.
இதற்காக வீட்டுப்பணிபெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும். இதற்கு வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.