“ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவினார்.” – மதுர விதானகே குற்றச்சாட்டு !

கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலம் பாரிய அதிர்வலைகளை கடந்த நாட்களில் ஏற்படுத்தியிருந்தது. முக்கியமாக அது இலங்கையின் கல்விக்கொள்கையை முழுமையாக சீரழித்து விடும் என்பதாக பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தது. இலங்கை ஆசிரியர் சங்கம் இது தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியிருந்தது. முக்கியமாக இந்த சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான அங்கத்தவராகிய ஜோசப்ஸ்டாலின் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து எதிர்ப்புக்கள் இன்னும் அதிகமாகியிருந்தது.

இந்நிலையில் , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவினார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்டாலின் உண்மையில் இலங்கை மாணவர்கள் மீதோ, ஆசிரியர்கள், கல்வி, நாட்டின் மீதோ கரிசனை கொண்டவரல்ல. கடந்த போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கொழும்புக்கு வருவதற்காக வீதித்தடைகளை நீக்கச்சொன்ன ஒரு பயங்கரவாதி. இப்போதும் அவர் பயங்கரவாத செயற்பாட்டையே செய்கின்றார்.

அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியையும், வரப்பிரசாதங்களையும் பெறுகின்றவர். அதுபற்றி இன்றும் நான் தகவல்களைப் பெற்றுவருகின்றேன். கடந்த வாரம் பெற்ற தகவல்களை வைத்து நான் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விரைவில் சென்று தகவலளிக்கவுள்ளேன் என மதுர வித்தானகே எச்சரித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *