உலகில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உண்ண உணவின்றி 1500 சிறுவர்கள் பட்டினியால் மரணமடைகின்றனர் என்று விரிவுரையாளர் திருமதி சாரினா மாரசிங்க கூறினார்.
தென் மாகாண சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரிட்டாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். காலி கரிட்டாஸ் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விரிவுரையாளர் மாரசிங்க;
“இலங்கையில் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் மிக வேகமாக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனினும் வடக்கு, கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன என கல்விப்பகுதி தெரிவித்துள்ளது.
ஆனால், தென் பகுதிகளில் 11 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மேலதிகமாக பணிபுரிவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் 58,528 அங்கவீனச் சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் சிறார்களே பாடசாலைக்கு செல்கின்றனர். சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அநாதைகளாக உள்ளனர். அவர்களில் பலர் அநாதை இல்லங்களில் தங்கியுள்ளனர். அநாதை இல்லங்களின் அதிகாரிகள் அங்குள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது நிறுத்தப்படவேண்டும். சிறுவர்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 72 இலட்சம் பேர் உள்ளனர்’ என்றார். வேறு சிலரும் உரையாற்றினார்கள்.