ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, ஈராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.
தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்க தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “தலிபான்களும் சாதாரணக் குடிமக்களே. அவர்கள் இராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறும்போது,
”பாகிஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் தலிபான்கள் இனக்குழுவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தலிபான்கள் ராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல. அவர்களும் சாதாரணக் குடிமக்களே” என்று தெரிவித்தார்.
தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறதா? என்ற கேள்விக்கு,
“இதில் உண்மையில்லை. ஆப்கானில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். செப்டம்பர் இரட்டை கோபுரத் தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை” என்றார்.