பாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.