வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் நாயக்கர்சேனை பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரிந்த தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புத்தளம் கச்சேரியில் இந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குப் பெட்டியை திறந்து வாக்குச் சீட்டுகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்ட போது 16 வாக்குச் சீட்டுகள் இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
இது தொடர்பாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டிருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்களிப்பு மோசடியால் அதன் வாக்களிப்பை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்ததுடன், புத்தளம் மாவட்ட முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
இந்த வாக்களிப்பு நிலைய வாக்குப் பெட்டிக்குள் மோசடியான முறையில் வாக்குச் சீட்டுகள் காணப்பட்டதையடுத்து அந்த நிலைய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர் மதுரங்குளிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.