போராட்ட காலத்தில் வெளிநாடு ஓடியவர் அங்கஜன் இராமநாதன் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கதைக்க எந்த அருகதையுமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்புவது நாடகம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் பதிலளிக்கையிலேயே சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,
இங்கு பல்வேறு இயக்கங்களும் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய காலத்தில் தனது கல்வி நடவடிக்கைக்காக வெளிநாட்டுக்குச் சென்றவர்தான் அங்கஜன். தமிழ் மக்களின் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையார் வியாபாரி. இவர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனம், எரிபொருள் நிரப்பு நிலையம் என்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் இன்று காணப்படுகின்றன. இவர்களுக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், ஜெனிவா தொடர்பாகவும் பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை. அதைப்பற்றி இவர்கள் பேச முற்படுவதே நகைப்புக்கிடமானது.
நாட்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியலுக்குள் வந்தவர்தான் அங்கஜன் இராமநாதன். அவர் அன்றிலிருந்து இன்று வரை ஆட்சியாளர்களுடன், அரசுடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல இளைஞர்களை ஏமாற்றித்தான் அவர் வெற்றி பெற்றார். இது எல்லோருக்கும் தெரியும், என்றார்.