“சிறைச்சாலைக்குள் இருப்பது எங்கள் மக்கள். அவர்களை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனுராதபுரத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன ; அனுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகண பண்டார வுடன் இணைந்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஆராய்வதற்காக சென்றேன். சிறைச்சாலைக்கு வருவதாக நாங்கள் நேற்று அறிவித்திருந்தும்கூட இன்று சில தாமதங்கள் ஏற்பட்டது. அரைமணித்தியாலம் தாமதம் ஏற்பட்டது இது நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களது உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கை.
நான் சபாநாயகரை தொடர்புகொண்டு அவரிடம் முறையிட்ட பின்னர்தான் எங்களிற்கு இங்கு கதவு திறக்கப்பட்டது.சபாநாயகரின் அனுமதி பெற்ற பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைகளிற்கோ பொலிஸ்நிலையங்களிற்கோ சென்று கைதிகளை பார்க்கமுடியும் என்ற சட்டம் வருமானால் அது இந்த நாட்டில் சட்டமொழுங்கு எவ்வள தூரம் சீர்குலைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும்.
நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறானதாகயிருக்கும். அதிகாரிகள் கதவை திறக்கமறுத்திருந்தால் நாங்கள் இந்த இடத்திலேயே உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்போம்.
உள்ளேயிருப்பது எங்கள் மக்கள். அவர்களிற்கு துன்பம் நிகழும்போது துணையிருக்கவேண்டிய காப்பாற்றவேண்டிய பொறுப்பு எங்களிற்குள்ளது.
அதனால் தான் கொழும்பிலிருந்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.