இது தொடர்பான யோசனைகள் அடங்கிய பிரேரணையொன்றை, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பு யோசனைகள் தொடர்பில் அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப் படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நிதி நிறுவனங்களில் (பினான்ஸ், லீசிங்) தவணைக் கட்டண முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து, செலுத்த முடியாத நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணமளிக்கும் திட்டமொன்றையும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் பொருளாதாரம் 14% வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முழு நாட்டினதும் பொருளாதாரம் 6.4% வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றவேளையில் மேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சியானது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு நெருக்கமானது என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.
ஏ-9 பாதை திறக்கப்படுவதாலும், கிழக்கு மாகாணத்தில் இது வரை செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக “எயார்ரெல்” நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.” என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், “உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கு முடிந்துள்ளது.
வங்கிக் கூட்டமைப்பை வலுவாக்குவதற்குத் தக்கதருணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், வங்கி முறைமையில் மக்கள் நம்பிக்கைகொள்ளும் நிலை மேம்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையினருக்குப் பாரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.