லொகான் ரத்வத்தையின் அத்துமீறல்காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளிற்கு மாற்றவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறைக்கைதிகளை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எமக்கு எங்கும் பாதுகாப்பில்லை. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் பாதிக்கபட்டதாக கூறப்படும் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று நேரடியாக நானும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களோடு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் திரு.ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் திரு.கேசவன் சயந்தன் ஆகியோர் சிறையில் சென்று பார்வையிட்டோம்.
கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்கு பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம். அவர்களுக்கு நடந்த அநீதிக்கான நியாயம் கிடைக்கப்பட வேண்டும்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். எமது மக்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்பதை இவ் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது