மருந்து வகைகளுக்கான தேசிய கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நிதியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தமைக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேரடியாக பதிலளிக்க வேண்டுமென்று அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இக்கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமற் போனமை காரணமாக பெதடீன் கைய்ட்றோசோல் ஹட் மற்றும் மோர்ப்பின் போன்ற வலிநிவாரண மருந்துவகைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் சுகாதார சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சையின் போது வலி நிவாரண மாத்திரைகளாக பெதடீன் உபயோகிக்கப்படுகிறது. இந்த மருந்துகள், அரசாங்க வைத்திய சாலைக்கு விநியோகிக்கப்படாமையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச்சிகிச்சைப் பிரிவு மற்றும் அனைத்து மருத்துவப் பிரிவின் சிகிச்சைப் பணிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குமாரசிங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சு ஒரு மாதத்துக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருதொகுதி பெதடீன் மருந்துகள் காலாவதியானவை என தெரிய வந்ததையடுத்து பாவனையில் இருந்து அவை அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காலாவதியான இம்மருந்துகளை அப்புறப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வைத்தியசாலைகளில் மோர்ப்பின் மருந்தை பாவிக்குமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மருந்தின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.