உலக அளவில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், வாராந்திர ஆய்வு குறித்து நேற்று (14) அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் கொவிட் பெருந்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இது, கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு.
ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கொவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பல நாடுகள் தற்போது புதிதாக கொவிட் அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.