பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 69 வயதுடைய சேர் டேவிட் அமேஸ் என்பவரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்தவராவார்.
இன்று வெள்ளிக்கிழமை பகல் எசெக்ஸ் தென்மேற்குப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளாகிய அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 25 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கத்தி ஒன்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். அரசியலில் “கனிவான” ஒருவரை இழந்ததற்கு “எங்கள் இதயங்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
சேர் டேவிட் அமேஸ்,திருமணம் முடித்து ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாவார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.