திடீரென அதிகரித்த கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை – உடனடியாக நிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை !

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாக காணப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12,158 பேர் பெற்றுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10,145 பேர் சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த திங்கட்கிழமை (18) மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கடவுச்சீட்டு பெறும் போக்கு இவ்வாறு இருப்பதன் காரணமாக திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *