வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலியை SL Remit என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வௌிநாடுகளிலிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டிற்கு பறிமாற்றப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
உரிய வழிமுறையின் கீழ் குறித்த பணம் பரிமாற்றப்படாமையால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணி உரிய வகையில் கிடைக்காமையை கருத்திற்கொண்டு, SL Remit என்ற செயலியை அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்பட்சத்தில், 02 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டிற்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
இதனிடையே, நாட்டிலுள்ள அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.