விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு 35,819 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புலிகள் புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றருக்குள் முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டார்.
இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; “வன்னி, முல்லைத்தீவு பகுதிகளை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தற்போது புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், படையணிகள் தொடர்ந்து மும்முனைகளால் முன்னேறி வருகின்றன. 53 ஆவது படையணி தெற்குப்பக்கமாகவும் 4 ஆவது விசேட படையணியும் 45 ஆவது படையணியும் ஏ 35 வீதியூடாகவும் 58 ஆவது படையணி கிழக்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு மையப்பகுதியை நோக்கி படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து 35,819 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 3,848 பேரே வந்தனர். ஆனால் பெப்ரவரி மாதத்தில் இதுவரையில் 31,971 பேர் வந்துள்ளனர். இவர்களனைவரும் மெனிக் பார்ம் மற்றும் விஷேட இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டு அவசியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது’ எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.