கொரோனாவுக்கு எதிரான பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய 3 தடுப்பூசிகளினாலும் ஏற்படும் பாதுகாப்பானது கடந்த 6 மாதங்களில் சடுதியாகக் குறைவடைந்துள்ளது என ஆய்வினூடாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமொன்று முன்னெடுத்த ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளினாலும் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் குறித்த அமெரிக்க நிறுவனத்தினால் சுமார் 8 இலட்சம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் வைரசுக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பது இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் 86.9 சதவீதமாகக் காணப்பட்ட பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 43 சதவீதமாகவும், 89 சதவீதமாகக் காணப்பட்ட மொடர்ணா தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 58 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் 86.4 சதவீதமாகக் காணப்பட்ட ஜொன்சன் அன்ட் ஜொன்சன் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த 3 தடுப்பூசிகளாலும் கொவிட் வைரசுக்கு எதிராக கிடைக்கப் பெறும் பாதுகாப்பானது 86 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கருத்துத்தெரிவிக்கையில்,
தடுப்பூசிகளால் பெற்றுக் கொள்ளப்படும் பாதுகாப்பு குறைவடைகிறது என்று கிடைத்துள்ள அறிவித்தல் சிறந்ததொன்றல்ல.
பைசர் மற்றும் மொடர்ணா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் கனிசமாளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் என்பவற்றை ஆய்வை முன்னெடுத்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாரதூரமாக எச்சரிக்கின்றோம். உலகில்
காணப்படுகின்ற முன்அனுபவம் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம் என்றார்.