அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.
அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.