தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன் மீது இரகசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இவ்விசாரணையானது, ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் ஜனநாயக கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையிலும் எனது சுதந்திரமான சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் தலையீடாக அமைவதாகவே நான் கருதுகினறேன்.
தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெயர்ந்துள்ள மக்களைப் போர் நடக்கும் பகுதிகளிலோ அல்லது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலோ சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். அரச ஊடகங்களில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மாநாடு விமர்சிக்கப்பட்டமை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என்னை விசாரித்தமை, உண்மைகளை அடக்குகின்ற ஒரு நோக்கத்துடன், எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரோதமான ஒரு முயற்சியாகவே நான் கருத வேண்டியுள்ளது.
எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நிலையில் இதனைத் தங்களுக்கு அறிவிப்பது எனது கடமை என்று நான் நினைக்கின்றேன். தங்கள் அரசாங்கத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்படும் சீரற்ற நடைமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்.”