சர்வதேச பொருளாதார பின்னடைவால் செல்வந்த நாடுகள் தமது வரவு செலவுத்திட்டத்தில் உதவி வழங்கும் தொகையை பல பில்லியன் டொலர்களால் குறைத்து ஒதுக்கீடு செய்யவுள்ள நிலையில், உலகின் வறிய மக்கள் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 50 இற்கும் அதிகமான குழுக்கள் உதவி வழங்கும் நடவடிக்கை கூட்டணியில் உள்ளன. இவற்றில் 175 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருடாந்தம் 9 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தனிப்பட்டவர்கள், வர்த்தக நிறுவனங்கள், மன்றங்கள் என்பனவற்றிடமிருந்து இந்த வருடம் 1 பில்லியன் டொலர் குறைவாகவே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமை (பொருளாதார வீழ்ச்சி) 2010 இற்கும் தொடருமானால் உலகின் வறிய மக்கள் வாழும் பகுதிகளுக்கான உதவிகள் கணிசமான அளவு குறைந்துவிடுமென எதிர்பார்க்கலாம் என்று செயற்பாட்டுக்குழு தலைவர் சாவ் வேர்த்திங் ரன் ராய்ட்டருக்கு கூறியுள்ளார். பிரிட்டனில் பவுண்ஸின் பெறுமதி வீழ்ச்சியால் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிம்பாப்வே, இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் நெருக்கடியில் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் பல சமூகங்களுக்கு உதவித் தேவைகள் அதிகரித்துள்ள தருணத்தில் இந்த உதவி முடக்கம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் 322 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வருமானம் அடுத்த வருடம் அரைவாசியாக வீழ்ச்சி கண்டுவிடுமென தெரிவிக்கப்படுகிறது.