கட்டுப் பாட்டு விலையை விட அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, சம்பா வகை அரிசியை 70 ரூபாவுக்கு அதிகமாகவும், நாட்டு அரிசியை 65 ரூபாவுக்கு அதிகமாகவும், விற்பனை செய்யும் சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான இத்தீர்மானம், கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் வாராந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதை அடுத்து அங்கு ஒரு இலட்சத்து 31,176 ஏக்கர் புதிய வயல் நிலங்களில் நெற் செய்கை மேற்பட்டுள்ளதால், பெருமளவான நெல் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலையில் 29,008 ஏக்கர் புதிய வயல் நிலத்திலும் மட்டக்களப்பில் 63,365 ஏக்கர் நிலத்திலும் அவ்வாறே அம்பாறையில் 38,803 ஏக்கர் நிலத்திலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தபட்சம் 60 வீதமான, 4 இலட்சத்து 80,260 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விற்பனைக்காக விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.