வடக்கில் மோதல் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டமைச்சர் மகிழ்ச்சி – வெளிவிவகார அமைச்சு அறிக்கை

_dr-bernard-kouchner.jpgஇலங்கை யின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு, பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், பிரான்ஸினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள் பற்றியும் விசாரித்தார். அத்துடன், யுத்தம் இடம்பெறும் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் தனது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

இதன் போது அமைச்சர் ரோகித போகொல்லாகம புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் பகுதியிலுள்ள மக்களை எவ்வாறு இடமாற்றிச் சென்று மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன், மருத்துவ உதவி உட்பட மனிதாபிமான சேவையை செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பற்றியும் தெரிவித்தார். மேலும் , அரசாங்கத்தால் கைப்பற்றப்படாத பகுதிகளிலுள்ள அரசாங்க முகவர் நிலையங்களின் செயற்பாட்டை புலிகள் தடைசெய்திருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரெஞ்சு செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்படக் கூடிய சேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். இவ்வுதவிகள் பயனுள்ளதாக இருக்குமென அமைச்சர் ரோகித போகொல்லாகம கருத்துத் தெரிவித்தார். பிரான்ஸினால் வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தொடர்ந்து கலந்துரையாடுவது தொடர்பில் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர். மேலும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு முன்னர் அமைச்சர் போகொல்லாகமவால் விடுக்கப்பட்ட அழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பாக புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளதாகவும் குச்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *